89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கரூர் | மேட்டு மகாதானபுரம் ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு

கரூர் | மேட்டு மகாதானபுரம் ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு

கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டுமகாதானபுரம் ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு திருவிழாவை ஒட்டி ஆடி 19-ம் தேதியான இன்று (ஆக. 4ம் தேதி) பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டுமகாதானபுரம் ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் தலைத்தேங்காய் உடைத்து கொள்வதற்கு நேர்ந்துக்கொண்ட பக்தர்கள் ஆடி 1-ம் தேதி முதல் காப்பு கட்டி விரதம் இருந்தனர். விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மேட்டுமகாதானபுரத்திற்கு வந்திருந்தனர். விழாவையொட்டி காவிரியில் இருந்து சனிக்கிழமை ஊர்வலமாக தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. சக்தி அழைப்பும் தொடர்ந்து இரவு அம்மன் காவிரி ஆற்றுக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார்.

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் இன்று (ஆக. 4ம் தேதி) காவிரி ஆற்றில் குளித்து விட்டு வந்து கோயில் முன் தலையில் தேங்காய் உடைத்துக்கொள்ளும் பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் வந்து அமர்ந்திருந்தனர். பலர் சாமிக்கு முடி இறக்கி மொட்டை தலையுடன் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பரம்பரை பூசாரி பெரியசாமி பாதக்குரடு (ஆணி செருப்பு) அணிந்து, அம்பு போட்டவுடன்
(இரும்பு பட்டை கம்பியால் அடித்துக்கொள்ளுதல்) அருள் பெற்று வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்தார். தங்கள் தலையில் உடைத்த தேங்காய்களை பக்தர்கள் மற்றும் விழாவில் பங்கேற்றவர்கள் சேகரித்து எடுத்து சென்றனர். ஒரு சிலருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினமே மேட்டுமகாதானபுரம் வந்து தங்கியிருந்து தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர் மற்றும் திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கரூர், திருச்சி, முசிறி, மணப்பாறை ஆகிய ஊர்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5UB2QVl
via IFTTT