உலக ஹீமோபிலியா தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 17-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ‘ஹீமோபிலியா’ என்பது மரபணு வழியாக வரக்கூடிய நோயாகும். இக்குறைபாடு உள்ளவர்களின் உடலில் காயம் ஏற்பட்டால் ரத்தம் உறையாமல் தொடர்ந்து வெளியேறும். உரிய சிகிச்சை இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். மரபு வழி நோயான இது ஆண்களை மட்டுமே பாதிக்கிறது. நம் உடலில் ரத்தம் உறைவதற்கு 13 காரணிகள் (ஃபேக்டர்ஸ்) தேவை. இவற்றில் காரணிகள் 8,9 ஆகியவை இன்றியமையாதவை. காரணி-8 குறைபாடு ஹீமோபிலியா-ஏ எனவும், காரணி-9 குறைபாடு ஹீமோபிலியா-பி எனவும் அழைக்கப்படுகிறது.
உலகளவில் 11.25 லட்சம் ஆண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4.18 லட்சம் பேருக்கு தீவிர குறைபாடு உள்ளது. சராசரியாக இந்தியாவில் 1.36 லட்சம் பேரும், தமிழகத்தில் சுமார் 1,800 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹீமோபிலியா சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனையில் ஆண்டுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை செலவு செய்யப்படுகிறது. இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 331 பயனாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4j7TWUa
via IFTTT