மதுரை; அருவிமலையில் பழங்கால குகைத்தளம் உள்ளதால் இந்த மலையை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை பண்பாட்டு குழுவினர் நேற்று மனு அளித்தனர். மதுரை மாவட்டத்தில் 16 மலைக்குன்றுகளில் இதுவரை சமணர் கற்படுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 8 மலைக்குன்றுகள் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையாலும் 7 மலைக்குன்றுகள் இந்திய அரசு தொல்லியல்துறையாலும் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவித்து பாராமரிக்கப்படுகிறது.
இந்நிலையில், மதுரை அருவிமலையில் உள்ள குகைத்தளத்தில் 12-க்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் கொண்ட குகைத்தளம் மதுரை இயற்கை பண்பாட்டு குழுவினரால் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் அறிவு செல்வம் மற்றும் கட்டடக்கலை, சிற்பத்துறை ஆய்வாளர் தேவி அறிவு செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்து அருவிமலை கற்படுகைகளை உறுதி செய்தனர். 30 பேர் தங்குமளவில் இந்த குகைத்தளம் உள்ளது. அதனால், அருவிமலையை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை பண்பாட்டு குழுவினர் மனு அளித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Go8qzpV
via IFTTT