முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: தமிழக மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடங்கள்
தமிழக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ் இடங்கள் தமிழக மாணவர்களுக்கே உறுதி செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் நீட் தேர்வு குறித்த விவகாரத்தை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், நம் மாநிலத்தின் உரிமையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க முடியாது என்று தெரிவித்தார். வெளி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தமிழகத்தில் இருப்பிடச் சான்றிதழ் வாங்கி தமிழக மருத்துவ கல்லூரிகளில் சேருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதாக குறிப்பிட்ட அவர், இதனை எதிர்கொள்ள இந்தாண்டிற்கான தகவல் கையேட்டில் 12 கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தினமலர்: கடனை செலுத்தாத தந்தையால் மகளுக்கு கடன் மறுப்பு சரியே
வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத தந்தையால், மகளுக்கு கல்வி கடன் வழங்க வங்கி மறுத்தது சரிதான் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நாகையை சேர்ந்த தீபிகா, பி.எஸ்.சி நர்சிங் படிப்புக்காக 3.40 லட்சம் ரூபாய் கடன் கேட்டு வங்கியில் அளிக்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
மனுதாரரின் தந்தை பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்தாதலால், அவருக்கு எதிராக வழக்குகள் உள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை நீதிபதி வைத்தியநாதன் சுட்டிக்காட்டினார். கடனை திருப்பி செலுத்தாவர்களின் பின்னால் ஓடுவதற்கு பதில், அவர்களின் நம்பகத்தனைமையை கண்டறிந்து முதலிலேயே நிராகரித்து விடலாம் என்று நீதிபதி தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.
தி இந்து (ஆங்கிலம்) : ஜி.எஸ்.டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் மற்றும் மது வராது
ஜி.எஸ்.டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் மற்றும் மது ஆகியவற்றை கொண்டுவரப் போவதில்லை என்ற முடிவை தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக ’தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மது மற்றும் பெட்ரோல். டீசல் விற்பனையில் வரும் வருவாயானது மாநிலத்தின் நிதி நிலைமையை பாதுகாக்க அவசியமானது என்று தெரிவித்தார்.